அரிமளம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்


அரிமளம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 7:53 PM GMT)

அரிமளம் அருகே கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் பிலியவயல் ஊராட்சி வம்பரம்பட்டியில் கிராமத்தில் குட்டியாண்டவர் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் திருவிழாவின் போது, மரியாதை கொடுப்பது தொடர்பாகவும், வரிவசூலிப்பது தொடர்பாகவும் இருதரப்பினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மோகன் இருக்கோவில்களையும் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவர உத்தரவிட்டார். இதையடுத்து இருக்கோவில்களையும் இந்துசமய அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரச்சினை காரணமாக கடந்த 19 ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாமல் உள்ளது.

தேர்தல் நடத்த உத்தரவு

இந்த நிலையில் ஒரு தரப்பினர் மீண்டும் கோவிலை கிராமத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்படுவதால், கோவிலை பராமரிக்க அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று வம்பரம்பட்டியில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் 473 பேர் தேர்தலில் போட்டியிட மற்றும் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக இந்துசமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் செயல்பட்டு தேர்தலை நடத்தினார். இந்த 473 பேரில் நேற்று 343 பேர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் போட்டியிட்டனர். 

Next Story