7 மாதங்களுக்கு பிறகு கோதண்டராமர் சிலை கர்நாடக எல்லையை அடைந்தது வழிநெடுகிலும் பொதுமக்கள் தரிசனம்


7 மாதங்களுக்கு பிறகு கோதண்டராமர் சிலை கர்நாடக எல்லையை அடைந்தது வழிநெடுகிலும் பொதுமக்கள் தரிசனம்
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 8:44 PM GMT)

7 மாதங்களுக்கு பிறகு பிரமாண்ட லாரியுடன் கோதண்டராமர் சிலை கர்நாடக மாநில எல்லையை நேற்று அடைந்தது. இதையொட்டி வழிநெடுகிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர், 

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் பிரமாண்ட 

கோதண்டராமர் சிலை நிறுவ அந்த பகுதி பொதுமக்கள் 

முடிவு செய்தனர். இதற்காக 350 டன் அளவிலான பிரமாண்ட 

கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் 

வந்தவாசி அருகே கொரகோட்டை என்ற இடத்தில் ஒரே 

கல்லில் செதுக்கப்பட்டு பெரிய லாரியில் கடந்த நவம்பர் 

மாதம் ஏற்றப்பட்டது. அங்கிருந்து பல்வேறு பிரச்சினைகளை 

கடந்து கோதண்டராமர் சிலை கொண்டு வரப் பட்டது.

இந்த நிலையில் லாரியின் டயர்கள் அடுத்தடுத்து வெடித்தது, 

சிலையை கொண்டு வருவதற்காக தற்காலிக பாலங்கள் 

அமைத்தல், சாலையோர கடைகளை அகற்றுதல் என்று 

பல்வேறு சிரமங்களை கடந்து அந்த சிலை கடந்த ஜனவரி 

மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை 

வந்தடைந்தது. அங்கிருந்து கிருஷ்ணகிரி வழியாக 

கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ் சாலையை கடந்த 

பிப்ரவரி மாதம் சென்றடைந்தது. அங்கு தற்காலிக பாதை 

அமைக்கும் பணிகளுக்காக சுமார் 3 மாத காலம் அந்த சிலை 

சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் 
நிறுத்தப்பட்டது.

சுமார் 8 இடங்களில் தற்காலிக பாதைகள் அமைக்கப்பட்டு 
கடந்த 3-ந் தேதி கோதண்டராமர் சிலை சாமல்பள்ளம் என்ற 
இடத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. 
தொடர்ந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலை 
சமமாக இல்லாததால் அதை சரி செய்ய சிறிது நாட்கள் 
லாரியுடன் சிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து லாரி டயர்கள் 
வெடித்த காரணத்தாலும், மண் பாதையில் லாரி சிக்கி 
கொண்ட காரணத்தாலும் சிலை மேற்கொண்டு செல்வதில் 
சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையே சிலையை கொண்டு செல்லக்கூடிய 
டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும், சிலை 
ஏற்பட்டாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. 
பின்னர் அதில் சுமுக தீர்வு ஏற்பட்டு சிலை கொண்டு 
செல்லப்பட்டது. இதற்கிடையே ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி 
என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றை கடக்க வேண்டும் 
என்பதால் அங்கு சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.
இதற்காக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. 14 

நாட்களுக்கும் மேலாக அந்த இடத்திலேயே இருந்த சிலை 

நேற்று முன்தினம் நள்ளிரவு பேரண்டப்பள்ளியில் இருந்து 

புறப்பட்டது. பத்தலப்பள்ளி, சீதாராம் மேடு வழியாக சென்ற 

சிலை நேற்று காலை 5 மணி அளவில் ஓசூர் நகரை 

அடைந்தது. அங்கிருந்து தர்கா, மூக்கண்டப்பள்ளி, சிப்காட், 

ஜூஜூவாடி வழியாக தமிழக - கர்நாடக மாநில எல்லையை 

கடந்து, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியை அடைந்தது. 

ஓசூரில் இருந்து புறப்பட்ட கோதண்டராமர் சிலையை 

வழிநெடுகிலும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். சுமார் 7 

மாதங்களாக திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி 

வழியாக சென்ற சிலையுடன் கூடிய லாரி தற்போது கர்நாடக 

எல்லையை அடைந்துள்ளது.

அத்திப்பள்ளியில் 2 நாட்கள் சிலையை நிறுத்தி வைத்து, 

அதன் பின்னர் பெங்களூருவுக்கு கொண்டு செல்ல உள்ளதாக 

சிலை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர். கர்நாடக எல்லையில் 

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை 

ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள்.

Next Story