குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 9:01 PM GMT)

வையம்பட்டி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படு கிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நேற்று காலை காலிக் குடங்களுடன் நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர்.

வாக்குவாதம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வையம்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி பூபதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி முத்துக்கருப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும்-அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, குடிநீர் கிடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.


Next Story