அ.தி.மு.க. மோசம் போய்விட்டது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் - தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி


அ.தி.மு.க. மோசம் போய்விட்டது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் - தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 24 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 12:13 AM GMT)

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. மோசம் போய்விட்டதாகவும், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் என்றும் தேனியில் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

தேனி, 

அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவருமான தங்கதமிழ்செல்வன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பணம் பாதாளம் வரை பாயும் என்பது தேனி தொகுதியில் 100 சதவீதம் உண்மையாகி விட்டது. டி.டி.வி.தினகரன் 2004-ம் ஆண்டு இதே தொகுதியில் பா.ஜ.க., அ.தி. மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோற்றார். நான் 2009-ல் போட்டியிட்டு 6 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றேன்.

ஆனால், இப்போது ஓ.பன்னீர்செல்வம் மகன் பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெறுகிறார் என்றால், ஏசு, அல்லா, முருகன் எல்லாம் எங்கே போனார்கள்? மதம் எங்கே போனது?. சிறுபான்மையின மக்கள் வாக்கு 2 லட்சம் உள்ளது. அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்?. பணம் பாதாளம் வரை பாய்ந்து விட்டதே.

ஆனால், தேனியில் பணம் விளையாடி உள்ளது. ஒரு நாடாளுமன்ற தேர்தலில் ரூ.500 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் இது யார் அப்பன் வீட்டு பணம்?. ரூ.500 கோடி எப்படி செலவு செய்தார்கள் என்று மக்கள் யாரும் கேட்கவில்லையே. தேர்தலில் ஜனநாயகம் இல்லை. பணநாயகம் தான் வெற்றி பெற்றுள்ளது. இனி நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.500 கோடியும், சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.100 கோடியும் செலவு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

மோடியின் ஆசியோடு, ஓ.பன்னீர்செல்வம் ஆசியோடு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. மோசம் போய்விட்டது. மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்துக்கு முதல்-அமைச்சராக வருவார். எடப்பாடி பழனிசாமியை தூக்குவார்கள். மோடி சொல்படி தான் இங்கே எல்லாம் நடக்க போகிறது. மிருக பலத்துடன் பாஜ.க. இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story