2030-ல் இந்தியாவின் மின் உற்பத்தி இரு மடங்காக உயரும் பொறியாளர்கள் தேசிய மாநாட்டில் என்.எல்.சி. இயக்குனர் தகவல்


2030-ல் இந்தியாவின் மின் உற்பத்தி இரு மடங்காக உயரும் பொறியாளர்கள் தேசிய மாநாட்டில் என்.எல்.சி. இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 6:41 PM GMT)

2030-ல் இந்தியாவின் மின் உற்பத்தி இரு மடங்காக உயரும் என்று உற்பத்தி பொறியாளர் கள் தேசிய மாநாட்டில் என்.எல்.சி. இயக்குனர் கூறினார்.

திருச்சி,

உற்பத்தி பொறியாளர்களின் 34-வது தேசிய மாநாடு நேற்று திருச்சி என்.ஐ.டி.யில் நடந்தது. மாநாட்டிற்கு உற்பத்தி பொறியாளர் கழகத்தின் தலைவர் தேவ் குமார் திரிபாதி தலைமை தாங்கினார். இந்திய பொறியாளர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மின் உற்பத்தி துறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் என்ற கருத்தரங்கமும் நடைபெற்றது. கருத்தரங்கில் 120 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த மாநாட்டை நெய்வேலி அனல் நிலையத்தின் (என்.எல்.சி) இயக்குனர் (மின்சாரம்) ஷாஜி ஜான் தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஒரு நாட்டின் வளர்ச்சியில் மின்சார உற்பத்தி முக்கிய பங்கை வகிக்கிறது. உலக அளவில் ஒரு மனிதனின் ஒரு ஆண்டுக்கான சராசரி மின்சார பயன்பாடு என்பது 3,200 யூனிட் ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் அது 1,200 யூனிட் ஆக உள்ளது. எனவே இந்தியாவின் மின் உற்பத்தி திறன் மேலும் மேம்படுத்தப்படவேண்டியது உள்ளது.

இந்தியாவில் தற்போது மின் உற்பத்தி திறன் 356 ஜிகாவாட் ஆக உள்ளது. அனல் மின்நிலையங்கள் மூலம் 63.5 சதவீத மின்சாரமும், நீர் மின்நிலையங்கள், சூரிய சக்தி மின் நிலையங்கள், காற்றாலைகள், அணுமின்நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க மாற்று மின் சக்திகள் மூலம் மீதம் உள்ள 36.5 சதவீத மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மின் உற்பத்தி இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2050-ம் ஆண்டு இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தை பிடிக்கும்.

புதுப்பிக்கத்தக்க மாற்று மின் சக்திகளின் உற்பத்தி அதிகரித்தாலும் அனல் மின் உற்பத்தி இந்தியாவில் குறையாது. தற்போது அமைக்கப்படும் அனல் மின் நிலையங்களில் உயர் மின் அழுத்த கொதிகலன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுவதுடன் எரிபொருள் பயன்பாடு குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் பொறியாளர்கள் லம்பா, நூருல்ஹக் ஆகியோருக்கு உற்பத்தி துறையில் சாதனையாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது. தொடக்கத்தில் பொறியாளர் கழகத்தின் திருச்சி மைய தலைவர் குமரேசன் வரவேற்றார். இந்த மாநாடு இன்று இரண்டாவது நாளாக நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் மாநாட்டில் மின் உற்பத்தி தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. 

Next Story