கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை: கைதான 11 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை: கைதான 11 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 28 May 2019 10:15 PM GMT (Updated: 28 May 2019 6:38 PM GMT)

கும்பகோணம் பா.ம.க. பிரமுகர் கொலையில் கைதான 11 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தடுத்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக திருமங்கலக்குடி நிஜாம் அலி(வயது33), முகமது பர்வீஸ்(26), முகமது தவ்பிக்(29), திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த சர்புதீன்(60), முகமது ரியாஸ்(60), முகமது அசாருதீன்(24), முகமது ரிஸ்வான், ஆவணியாபுரத்தை சேர்ந்த தவ்ஹீத் பாட்சா(26), தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த முகமது இப்ராகிம்(47) உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த கடந்த ஏப்ரல் 29-ந் தேதி முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடுதல் சூப்பிரண்டு சவுக்கத் அலி தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட்டு, 11 பேரையும் வருகிற 3-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து 11 பேரும் நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் இருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து 11 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story