ஆரோவில் அருகே, லாரி டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ஆரோவில் அருகே, லாரி டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jun 2019 10:30 PM GMT (Updated: 1 Jun 2019 5:26 PM GMT)

ஆரோவில் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள ராயப்பேட்டை இளங்கோவடிகள் நகரில் வசித்து வருபவர் குமார் (வயது 36), லாரி டிரைவர். இவருடைய மனைவி கீதா (34). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குமார் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், நள்ளிரவில் குமார் வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்தனர்.

அங்கு வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை திறக்க முயன்றனர். ஆனால் முடியாததால் பீரோவை வீட்டுக்கு வெளியே உள்ள சவுக்கு தோப்புக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 3 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.

இதனிடையே நேற்று காலை குமார் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம், பக்கத்தினர் பார்த்து திடுக்கிட்டனர். உடனே இதுகுறித்து அவர்கள், குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் குமார், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் இருந்து தனது வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். பின்னர் வீட்டின் பின்புறமுள்ள சவுக்கு தோப்புக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story