திங்கள்சந்தை அருகே குளத்தில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி மறியல்


திங்கள்சந்தை அருகே குளத்தில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி மறியல்
x
தினத்தந்தி 2 Jun 2019 11:00 PM GMT (Updated: 2 Jun 2019 8:31 PM GMT)

திங்கள்சந்தை அருகே குளத்தில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே நுள்ளிவிளை ஊராட்சிக்கு உள்பட்ட பேயன்குழியில் பனங்காட்டுகுளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை சுற்றுவட்டார பகுதி மக்கள் குளிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், இந்த குளத்து தண்ணீர் மூலம் பல ஏக்கர் நிலப்பரப்பில் வாழை, நெல் போன்றவை பயிரிடப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்தில் இருந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்க்கான மதகு அடைக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. அதன்பின்பு, விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டது. இதையடுத்து அடைக்கப்பட்ட மதகை சரி செய்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று பேயங்குழி சந்திப்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் ஏராளமானோர் கூடினர். அவர்கள் குளத்தில் அடைக்கப்பட்ட மதகை சரி செய்து, விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசுபாதம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 15 நாட்களில் மதகை சரி செய்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story