2 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை 5 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு


2 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை 5 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 4 Jun 2019 10:15 PM GMT (Updated: 4 Jun 2019 7:35 PM GMT)

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 5 பவுன் நகையை திருடி சென்றனர். இதைப்போல மற்றொரு வீட்டிலும் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவருடைய மனைவி மகாலட்சுமி(வயது 70). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் அண்ணாமலை தஞ்சையில் பாத்திமா நகரில் வசித்து வருகிறார். மகாலட்சுமி அடிக்கடி தனது மகன் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று மகாலட்சுமி வல்லத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு சமயபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் மகாலட்சுமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். மேலும் மகாலட்சுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் மோகன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து மகாலட்சுமி வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் துறை அதிகாரி கலைகண்ணகி தலைமையிலான அதிகாரிகள் திருட்டு நடந்த வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை - மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story