கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 3½ லட்சம் தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்


கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 3½ லட்சம் தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 8:45 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்படைந்த தென்னை விவசாயிகளுக்கு 3½ லட்சம் தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதம் அடைந்த தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பயன் அடைந்திடும் வகையில் ஊடுபயிர் சாகுபடியாக உளுந்து, எள் விதைகள் வினியோகம் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் ஆகியவை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வழங்கப்பட்டு வருகிறது.

கஜா புயலால் தென்னங்கன்றுகள், மக்காச்சோளம், பயறுவகைகள், கரும்பு, மா, முந்திரி, புளி உள்பட ஏராளமான பயிர்கள் சேதம் அடைந்தன. குறிப்பாக தென்னை மரங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 10 ஆயிரத்து 514 தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.69 கோடியே 20 லட்சமும் மற்றும் இதர பயிர் களுக்கு 90 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 6 லட்சமும் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழக அரசால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட கஜா புயல் 2018 வாழ்வாதார தொகுப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தென்னை சாகுபடியில் உளுந்து ஊடுபயிர் சாகுபடிக்கு 4000 எக்டர் பரப்பளவிலும், எள் ஊடுபயிர் சாகுபடிக்கு 1,500 எக்டர் பரப்பளவிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் உளுந்து ஊடுபயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ உளுந்து விதைகளும் மற்றும் இதர இடுபொருட்களும், இதேபோல எள் ஊடுபயிர் சாகுபடிக்கு விவசாயிக்கு எக்டர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ எள் விதைகளும் இதர இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

அத்துடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் நுண்ணீர் பாசனம் அமைக்க 2 ஆயிரம் எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,603 எக்டர் பரப்பளவிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கஜா புயலால் பாதிப்படைந்த தென்னை விவசாயிகளுக்கு இழந்த தென்னங்கன்றுகளை நடுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 3½ லட்சம் தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு, இதுவரை 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குழிகள் எடுக்கப்பட்டு தென்னங்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம் படுத்திட புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story