குளித்தலையில் ஆட்டோ மோதியதில் ரெயில்வே கேட் சேதம் போக்குவரத்து பாதிப்பு


குளித்தலையில் ஆட்டோ மோதியதில் ரெயில்வே கேட் சேதம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2019 10:30 PM GMT (Updated: 9 Jun 2019 8:19 PM GMT)

குளித்தலையில் ஆட்டோ மோதியதில் ரெயில்வே கேட் சேதமடைந்தது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை மணப்பாறை சாலையில் ரெயில்வேகேட் ஒன்று உள்ளது. குழாய்வடிவில் மேலும் கீழும் இயங்கும் வகையில் இந்த ரெயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. குளித்தலை வழியாக கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக ரெயில்கள் செல்லும்போது குழாய்வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில்வேகேட் கீழே இறக்கப்பட்டு ரெயில் சென்ற பின்னர் மேலே தூக்கப்படும். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குளித்தலை பகுதி வழியாக ரெயில் ஒன்று சென்றுள்ளது.இதையொட்டி இந்த ரெயில்வேகேட் கீழே இறக்கப்பட்டுள்ளது. அப்போது குளித்தலை அருகேயுள்ள கோட்டமேடு வழியாக குளித்தலை நோக்கி வந்த ஆட்டோ இந்த ரெயில்வே கேட்டின்மீது மோதியது. இதில் இந்த ரெயில்வேகேட் சேதமடைந்த காரணத்தால் அதை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி

இதனால் எந்தவித வாகனங்களும் ரெயில்வேகேட்டை கடந்து செல்ல முடியாமல் கேட்டின் இருபுறமுள்ள சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் நேற்று காலைவரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் சில வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு வேறுவழியில் சென்றன. ரெயில்வேகேட் சேதமடைந்தது குறித்து கேட் கீப்பர் ரெயில்வே அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தார்.இந்தநிலையில் நேற்று காலை வந்த ரெயில்வே பணியாளர்கள் சேதமடைந்த ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிகமாக இந்த கேட் திறக்கப்பட்டது. சேதமடைந்த இந்த ரெயில்வேகேட் முழுமையாக சீரமைக்கப்பட்டு நேற்று மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. ரெயில்வேகேட் மீது ஆட்டோ மோதி சேதமடைந்த காரணத்தால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 10 மணிநேரம் வாகனங்கள் எதுவும் ரெயில்வே கேட்டை கடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

Next Story