சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை


சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 9 Jun 2019 11:15 PM GMT (Updated: 9 Jun 2019 8:57 PM GMT)

சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதாவது, கடந்த 7-ந் தேதி சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிரு‌‌ஷ்ணா சாலை வரையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 8-ந் தேதி எடப்பாடியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை திறந்து வைத்தும், நைனாம்பட்டியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பயணியர் மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் சங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது குறித்தும், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது சம்பந்தமான முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அரசின் திட்டப்பணிகளை மக்களுக்கு சென்றடைவது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், குடிநீர் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதில், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், வெற்றிவேல், சக்திவேல், ராஜா, மனோன்மணி, சித்ரா, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் கட்சி தோல்வி அடைந்தது பற்றி விவாதிக்கப்பட்டது. தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் சிலர் சரிவர ஈடுபடாததே காரணம் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதன் பின்னர் நேற்று மாலை சென்னை செல்ல, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story