நாடாளுமன்ற தேர்தலைபோல தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றிபெற உறுதி் ஏற்போம் மு.க.ஸ்டாலின் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலைபோல தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றிபெற உறுதி் ஏற்போம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Jun 2019 11:15 PM GMT (Updated: 10 Jun 2019 6:40 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலைபோல விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றிபெற உறுதி ஏற்போம் என்று அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக அவரது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் அன்பில் கிராமத்தில் அவருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை திறப்பு விழாவுக்காக திமு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் அன்பில் கிராமத்திற்கு சென்ற அவர், அன்பில் தர்மலிங்கம் முழுஉருவச் சிலையை மு.க.ஸ்டாலின் ‘ரிமோட்’ மூலம் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்பில் தர்மலிங்கம் நூற்றாண்டு விழா மலரை அவர் வெளியிட, அதை கே.என்.நேரு எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அதைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

தீரர்கள் மாவட்டம்

நூற்றாண்டு விழா காணக்கூடிய நமது அன்பிலார் திருவுருவச்சிலையை அவர் பிறந்த, வாழ்ந்த ‘அன்பில்’ என்ற சிற்றூரில் உங்களது அன்பான வாழ்த்துகளோடு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை உங்களோடு இணைந்து நானும் பங்கேற்று அவரது திருவுருவச்சிலையை திறந்து வைக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை எண்ணி நான் பூரித்து நிற்கிறேன்.

அன்பிலார், எப்படிப்பட்ட செயல் வீரராக ஒரு தளபதியாக தளவேந்தராக அனைத்தையும் தாண்டி தி.மு.க.வுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினுடைய தோழர்களுக்கும், தலைவர்களுக்கும் துணை நிற்கக்கூடிய வகையிலே ஒரு அரும்பணி ஆற்றி இந்த இயக்கத்திற்கும், குறிப்பாக நமது கலைஞர் கருணாநிதிக்கும் எந்த அளவு பெருமை சேர்த்து தந்தார் என்பதை நாடறியும். அவரது அயராத உழைப்பை யாரும் மறக்க முடியாத நிலையிலே, இந்த திருச்சி மாவட்டம் இன்று தீரர்களின் மாவட்டமாக விளங்கி கொண்டிருக்கிறது. இது தீரர்களின் மாவட்டம் மட்டுமல்லாது திராவிட முன்னேற்ற கழகத்தின் தீரர்கள் இருக்கக்கூடிய மாவட்டமாக அன்பில் தர்மலிங்கம் உருவாக்கி தந்திருக்கிறார்கள். எனவே, அவரது நடையை பின்பற்றி நாமும் கடமையை ஆற்ற உறுதி எடுக்கக்கூடிய நாளாக அவரது சிலை திறப்பு விழா அமைந்துள்ளது.

மாபெரும் வெற்றி பெறுவோம்

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருந்தாலும், விரைவில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய தேர்தலிலும் அதைவிட மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு பாடுபட, பணியாற்றிட உறுதி ஏற்போம்.

இவ்வாறுஅவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பழனிமாணிக்கம், திருநாவுக்கரசர், திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story