கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 7:47 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரிஆனந்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில துணைத்தலைவர் கோதண்டபாணி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக அடிப்படையில் போராடும் சாலைப்பணியாளர்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு, இழிவு படுத்திய அதிகாரிகளை கண்டித்தும், முதன்மை இயக்குனர் பொறுப்பில் பொறியாளரை நியமனம் செய்யாமல், ஐ.ஏ.எஸ். அதிகாரியை முதன்மை இயக்குனராக நியமிக்க வேண்டும்.

ஆணை வழங்க வேண்டும்

சாலை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு உரிய ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் சாலைப்பணியாளர்கள் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண்பதற்கு பதிலாக காவல்துறையில் புகார் கொடுத்து போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அசாதாரண நிலையை உருவாக்கிவரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இந்த ஆப்பாட்டத்தில் இணை செயலாளர்கள் ராஜா, முத்து, துணை தலைவர் ராமநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சாலைப்பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், வருகிற 14-ந் தேதி முதல் கையெழுத்து இயக்கமும், 29-ந் தேதி முதல்-அமைச்சர், தலைமைச்செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு முறையீட்டு இயக்கமும் நடத்தப்படும் என்றனர்.

Next Story