விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை


விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 8:45 PM GMT)

விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு சிறப்பு கோர்ட்டுஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் பிர்ஜூ சல்லா. தொழில் அதிபர். இவர் மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பயணம் செய்தார்.

அப்போது, ‘‘இந்த விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீருக்கு கடத்தப்படுகிறது’’ என ஆங்கிலத்திலும், உருது மொழியிலும் ஒரு துண்டு சீட்டில் எழுதி கழிவறையில் உள்ள பெட்டியில் போட்டார்.

இது பற்றி அறிந்த விமான ஊழியர்களும், பயணிகளும் பீதி அடைந்தனர். உடனடியாக அந்த விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விசாரணைக்கு பின்னர் தான் அது கடத்தல் பீதி என்றும், அதை எழுதியவர் பிர்ஜூ சல்லா என்றும் தெரியவந்தது. இதையடுத்து பிர்ஜூ சல்லா கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடத்தல் பீதி ஏற்படுத்திய பிர்ஜூ சல்லாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story