உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் கிடந்த கோபுர கலசம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பு


உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் கிடந்த கோபுர கலசம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 9:45 PM GMT (Updated: 11 Jun 2019 9:04 PM GMT)

உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் கோவில் கோபுர கலசம் ஒன்று கிடந்தது. அதனை மீட்ட பொதுமக்கள் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தை சேர்ந்தவர் காளிதாஸ். முன்னாள் ஊராட்சித்தலைவரான இவருக்கு மருத்துவம்பாடி கூட்டுரோட்டில் விளைநிலமும், விவசாய கிணறும் உள்ளது.

பாலசுப்பிரமணியன் என்பவர் அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் மோட்டார் வேலை செய்யாததால், ஆண்டிதாங்கலை சேர்ந்த பாலசுந்தரம் என்ற மெக்கானிக் மோட்டாரை சரி செய்தார்.

பின்னர் கிணற்றில் இறங்கியபோது ஒரு சாக்கு பையில் மர்மப்பொருள் ஒன்று கட்டப்பட்டு கிடந்தது. பொதுமக்கள் உதவியுடன் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் பழமையான கோவில் கோபுர கலசம் ஒன்று இருந்தது தெரியவந்தது.

உடனே நிலத்தின் உரிமையாளர் காளிதாஸ் மற்றும் கிராம பொதுமக்கள் அந்த கலசத்தை உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜா தாமரைபாண்டியன் மற்றும் போலீசார், கோபுர கலசத்தை விவசாய கிணற்றில் வீசி சென்றது யார்? அது எந்த கோவிலை சேர்ந்தது? என்று விசாரித்து வருகிறார்கள்.


Next Story