டெல்டா மாவட்டங்களில் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு


டெல்டா மாவட்டங்களில் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 6:56 PM GMT)

டெல்டா மாவட்டங்களில் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் திகழ்ந்து வருகின்றன. குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை கால சாகுபடி என முப்போகம் நெல் விளைந்த பகுதியாகும்.

ஆனால் காவிரி நீர் பிரச்சினையானாலும், இயற்கை ஒத்துழைப்பு இல்லாததாலும் நெல் சாகுபடி இங்கு பாதிக்கப்பட்டு வருகிறது. குறுவை, கோடை சாகுபடி பாதிக்கப்பட்டு ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஜூன்-12-ந் தேதி அணை திறப்பு தேதி தள்ளி போய் கொண்டிருக்கிறது.

இதனால் ஆற்று பாசனத்தை நம்பியுள்ள குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. நிலத்தடி நீர் உள்ள பகுதியில் ஆழ்குழாய் அமைத்து விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறு, குளங்கள் வறண்டு காணப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் மும்முனை மின்சாரம் பற்றாக்குறை இருந்து வருகிறது. குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. குறுவை சாகுபடி தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழ்குழாய் பாசனம் மூலம் குறுவை சாகுபடி என்பது சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு குறுவை கைகொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்ற நிலைபாட்டில் தமிழக அரசு இருக்கிறது.

கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.2 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. ஆனால் தண்ணீரை வழங்காமல் கர்நாடக அரசு மவுனமாக இருந்து வருகிறது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் முதல் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இருந்தபோதிலும் தண்ணீர் போதுமான அளவு இருப்பு இல்லாததால் அணை திறக்க தற்சமயம் வாய்ப்பு இல்லாத நிலை நிலவுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் குறுவை சாகுபடியை தொடங்கலாமா? என்பது குறித்து அரசு உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும். கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி கூறியதாவது:- ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்காததால் தொடர்ந்து 8-வது ஆண்டாக திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு்ள்ளது.

நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்பவர்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படவில்லை. தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைவு, மின் பற்றாக்குறை போன்ற காரணமாக குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. எனவே கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story