கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு ரூ.5 லட்சத்தில் வேளாண் கருவிகள் கலெக்டர் தகவல்


கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு ரூ.5 லட்சத்தில் வேளாண் கருவிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 8:40 PM GMT)

கரூரில் கூட்டுபண்ணைய திட்டத்தின்கீழ் விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கப்படுவதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் சித்தலவாய், திருக்காம்புலியூர், கம்மாநல்லூர், மேட்டுமகாதானபுரம் மற்றும் சிந்தலவாடி பகுதியில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.

பின்னர், மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் விவசாயத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர் பாசனத்திட்டம் அமைக்கவும், பந்தல் அமைத்து காய்கறிகளின் மகசூல் செய்யவும் தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் புடலை, பாகற்காய், பீர்கன் காய்களை பந்தல் முலமாகவும், கரும்பு நுண்ணீர் பாசனத்திட்டம் முலமாவும் மகசூல் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அரசு, நுண்ணீர்ப்பாசத்திட்டம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளையும், வேளாண் கருவிகள் இடுபொருட்களையும் வழங்கி வருகிறது.

மேலும், கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயம் செய்தால் நல்ல லாபகரமான தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள இயலும் என்ற அடிப்படையில் 20 நபர்கள் கொண்ட விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு அதில் 5 குழுக்களை இணைத்து 100 நபர்களை கொண்ட விவசாய உற்பத்தியாளர் குழு அமைக்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு விவசாயத்தை தமிழக அரசு ஊக்குவித்து வருகின்றது. மேலும் இக்குழுக்களை 1000 நபர்கள் கொண்ட குழுக்களாக இணைத்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் என்று அமைக்கப்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளும், இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இக்குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமையடிப்படையில் வேளாண்கருவிகள் வாடகைக்கு விடப்படும். மேலும், குழுக்களில் இல்லாத விவசாயிகளுக்கும் இந்த வேளாண்கருவிகள் குறைந்த வாடகைக்கு விடப்படும். இந்த கூட்டுப்பண்ணையத்திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் 56 கூட்டுப்பண்ணைய குழுக்களுக்கு 2017-18 ஆண்டில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், 2018-19 ஆண்டில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான டிராக்டர், பவர்டில்லர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழை இல்லாத சூழலிலும் விவசாயம் செய்ய ஏதுவாக கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழை நீர் சேகரிக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பண்ணை குட்டை, தடுப்பணை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எந்த இடத்தில் தடுப்பணைகள் அமைத்தால் நிலத்தடி நீர் பெருகும் என்பதை ஆய்வு செய்து அதனடிப்படையில் அமைக்கப்படவுள்ளது. சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்க அரசின் மானியத்தை பெற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மேகன்ராம், உதவி இயக்குனர் தங்கவேல், வேளாண்மை துணை இயக்குனர் கந்தசாமி, வேளாண்மை அலுவலர் மணிமேகலை உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story