நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் - ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவிப்பு


நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் - ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:15 PM GMT (Updated: 12 Jun 2019 8:47 PM GMT)

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம், ஜூலை மாதம் 15-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் அறிவித்தார்.

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. சாமானிய மக்களின் தகவல் தொடர்பு, பாதுகாப்புக்கு தேவையான திட்டங்களை இந்த நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. கிராமங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணையதள சேவை கிடைக்கும் வகையில் பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறோம்.

சந்திரனில் ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. அது அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. இந்த நிலையில் சந்திரனில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலம் அனுப்ப கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.

அதற்கான பணிகள் அப்போதே தொடங்கப்பட்டன. அந்த பணிகள் முடிவடைந்துவிட்டது. 2, 3 முறை இந்த விண்கலம் அனுப்புவது தள்ளிப்போனது. இறுதியாக இப்போது இந்த சந்திரயான்-2 விண்கலம் அனுப்பும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. எம்.கே-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் லேண்டர் (தரையிறங்கும் களம்), ரோவர் (சுற்றும் வாகனம்), ஆர்பிட்டர் (விண்கலம்) ஆகிய 3 அனுப்பப்படுகின்றன. தரையிறங்கும் களத்திற்கு ‘விக்ரம்’ என்றும், ரோவருக்கு ‘பிரக்யான்’ என்றும் பெயரிட்டுள்ளோம்.

அந்த ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு ராக்கெட்டில் இருந்து செயற்கைகோள் அடங்கிய விண்கலம் தனியாக பிரிந்து பறக்க தொடங்கிவிடும். இந்த விண்கலம் செலுத்தப்பட்ட 16 நாட்களில் 5 முறை அதன் கோளப்பாதையை உயர்த்தும் பணிகள், என்ஜினை எரியூட்டி மேற்கொள்ளப்படும்.

அந்த விண்கலம் பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்து சந்திரனை அடையும். சந்திரனின் தென்பகுதியில் இந்த விண்கலம் தரை இறங்குகிறது என்பது இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு. இது மிகப்பெரிய சவாலானது. நிலவின் ெதற்கு தரை பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதில், இந்தியா 4-வது நாடு ஆகும்.

இந்த கோளப்பாதையை அதிகரிக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டபாதையை சென்றடைகிறது. பின்னர் சந்திரனின் பகுதியை அந்த விண்கலம் அடைகிறது. அதன் பிறகு தரையிறங்கும் கலத்தை தரையிறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக மெதுவான முறையில் அந்த விண்கலம் தரையிறங்கும்.

பின்னர் அந்த தரையிறங்கும் கலத்தின் கதவுகள் திறக்கும். சுமார் 4 மணி நேரம் இந்த பணிகள் நடைபெறும். அதன் பிறகு அந்த தரையிறங்கு கலத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் வெளியே வந்து, வருகிற செப்டம்பர் மாதம் 6 அல்லது 7-ந் தேதி தரை பகுதியில் இறங்கும்.

சந்திரனில், கனிமங்கள், கால்சீயம், இரும்பு தாது உள்ளிட்டவற்றை கண்டறிதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அந்த விண்கலம் ஆய்வு செய்கிறது. இந்த விண்கலத்தின் செலவு மட்டும் ரூ.630 கோடி ஆகும். ராக்கெட்டின் செலவு ரூ.375 கோடி ஆகும். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.978 கோடி. இந்த திட்டத்தின் இயக்குனர் ஒரு பெண் ஆவார். இந்த குழுவில் இடம் பெற்ற விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.

இந்த விண்கலத்தில் அனைத்து வகையான சோதனைகளும் நிறைவடைந்துவிட்டன. வருகிற 14-ந் தேதி (நாளை) அந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்படுகிறது. அது 17-ந் தேதி அங்கு போய் சேரும். அதன் பிறகு அங்கு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெறும்.

3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரனை அடைய, பயணிகள் விமானமான போயிங்-747 விமானத்தில் சென்றால், ஒரு மாதம் ஆகும். விண்கலத்தில், டெர்ரைன் மேப்பிக் கேமரா-2, லார்ஜ் ஏரியா எக்ஸ்ரே, சோலார் எக்ஸ்ரே, மிக அதிக திறன் கொண்ட ரெசிலூசின் கேமரா, ரேடார், ரேடியோ அறிவியல் கருவி ஆகிய கருவிகள் அனுப்பப்படுகின்றன.

இந்த விண்கலம் முற்றிலும் சொந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இதில் நாசாவின் கருவி ஒன்று பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்கலம் மூலம் கிடைக்கும் தகவல்கள், உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விண்கலத்தின் தகவல்களை பெற தனியாக ஒரு தகவல் தொடர்பு மையத்தை அமைத்துள்ளோம்.

சந்திரன் பூமிக்கு அருகில் இருப்பதால், அங்கிருந்து அனுப்பப்படும் தகவல், நமக்கும் 2 விநாடிகள் தாமதமாக கிடைக்கும். விண்கலம் சென்றடைந்த பிறகு அடுத்த 2 வாரத்திற்கு நமக்கு தகவல்கள் கிடைக்க தொடங்கும். இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார்.

முன்னதாக மாரத்தஹள்ளியில் உள்ள இஸ்ரோ மையத்தில், சந்திரயான்-2 விண்கலம் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.


Next Story