தாராபுரத்தில் பள்ளி வாகனம் மீது லாரி மோதல்: டிரைவர், 8 குழந்தைகள் காயம்


தாராபுரத்தில் பள்ளி வாகனம் மீது லாரி மோதல்: டிரைவர், 8 குழந்தைகள் காயம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 10:31 PM GMT)

தாராபுரத்தில் பள்ளி வாகனம்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்மற்றும் 8 பள்ளிக்குழந்தைகள் காயம் அடைந்தனர்.

தாராபுரம், 

தாராபுரம் பொள்ளாச்சிரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்ததும். பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வாகனத்தில் ஏறி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

புறவழிச்சாலையில் பஸ் நிலையம் அருகே மேம்பாலம் கட்டுப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் ஓட்டுனர் பிரேக்போட்டுள்ளார்.

இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, வேகமாகச் சென்று பள்ளி வாகனத்தின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 8குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டுனர் மகபுத்தான் (வயது 60) ஆகியோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக ஓட்டுனர் மகபுத்தானும் 8வயது மாணவியும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story