கள் இறக்குவதாக பொய் வழக்கு போட்டு, விவசாயிகளை கைது செய்ய கூடாது - போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


கள் இறக்குவதாக பொய் வழக்கு போட்டு, விவசாயிகளை கைது செய்ய கூடாது - போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 11:57 PM GMT)

கள் இறக்குவதாக பொய் வழக்கு போட்டு விவசாயிகளை கைது செய்யக் கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை,

நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் விவசாயிகள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்றுக்காலை வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள்ளுக்கு அனுமதி கேட்டு தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு முன்பு தென்னை மரத்தில் இருந்து நீராபானம் இறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. நீராபானம் என்பதும், கள் என்பதும் ஒரே மரத்தில் ஒரே பாளையில் ஒரே தன்மையில் எடுக்கக் கூடியது.

நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க விவசாயத்துறை அதிகாரிகள் எங்களுக்கு எந்த வித பயிற்சியும் அளிக்க வில்லை. நீராபானம் இறக்கிய பிறகு அது கள்ளாக மாறுவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. அரசை எதிர்த்தோ, போலீசாரை எதிர்த்தோ நாங்கள் செயல்படவில்லை.

கேரளாவில் கள், நீராபானத்துக்கு அனுமதி அளித்தது போல தமிழக விவசாயிகளுக்கும் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். கள்ளுக்கும், நீராபானத்துக்கும் என்ன வித்தியாசம் என்று விவசாயத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். கள் வைத்திருந்ததாக கூறி விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் போது அதை ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் முடிவை வெளியிட வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு கூட பொள்ளாச்சி ஆழியாறில் 7 விவசாயிகள் மீதும், பொள்ளாச்சி கோட்டூர் போலீஸ் நிலையத்தில் 7 பேர் மீதும், ஆனைமலை போலீஸ் நிலையத்தில் 3 பேர் மீதும், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒருவர், சிறுமுகை போலீஸ் நிலையத்தில் 5 பேர் மீதும், மேட்டுப்பாளையத்தில் 2 விவசாயிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே கள் இறக்குவதாக விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், கைது செய்வதையும் போலீசார் கைவிட வேண்டும். எனவே தமிழக விவசாயிகள் அனைவரும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story