விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா ஜூலை 14-ந் தேதி நடைபெறும் தொல்.திருமாவளவன் தகவல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா ஜூலை 14-ந் தேதி நடைபெறும் தொல்.திருமாவளவன் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:30 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் (தனி) தொகுதியின் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், நடைபெறஇருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்த வாக்காளர் பொதுமக்களுக்கும், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேதியை தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும். தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களை கூட்டி ஹைட்ரஜன் கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் போராடுவதற்கான கலந்தாய்வு கூட்டத்தை நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா கடந்த ஏப்ரல் 14-ந் தேதி நடந்திருக்க வேண்டும். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்ததால், விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. யார், யாருக்கு அந்த விருதுகள் வழங்கப்படும் தேர்வு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.

மதுரையில் அங்கன்வாடியில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண் சமையலரை பணியிட மாற்றம் செய்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண்ணை மீண்டும் மதுரையிலேயே பணியமர்த்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் (தனி) தொகுதியின் எம்.பி.யுமான ரவிக்குமார், பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், முதன்மை செயலாளர் பாவரசு, தலைமை நிலைய செயலாளர்கள், துணை பொதுச் செயலாளர்கள், மாநில அமைப்பு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story