தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய- மாநில அரசு செயல்படுத்துகிறது முத்தரசன் குற்றச்சாட்டு


தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய- மாநில அரசு செயல்படுத்துகிறது முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 9:01 PM GMT)

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கவுந்தப்பாடி,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை 400 கிலோவாட் உயர்அழுத்த மின்பாதை அமைக்கும் பணி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதற்காக தாராபுரத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை 190 கிலோ மீட்டர் தூரத்துக்கு 564 இடங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 524 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதி் 40 மின் கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் திருப்பூர் மாவட்டத்தில் 29-ம், ஈரோடு மாவட்டத்தில் 11-ம் என 40 மின் கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது.

இந்த 40 மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து மின்கோபுரம் அமைக்கும் பணியை ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரன்பாளையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வளையக்காரன்பாளையத்தில் உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் சுப்பராயன் எம்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களுக்கு முத்தரசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு எதிரான திட்டங்களையே மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகிறது. விவசாயிகளிடம் எந்்தவித முன் அனுமதியும் பெறவில்லை. உரிய இழப்பீடுகளும் வழங்கவில்லை. ஆனால் நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஜனநாயக முறையில் போராட்டக்குழுவினரை அழைத்துப்பேசி அரசு தீர்வு காண வேண்டும். ஆனால் போலீசாரை கொண்டு விவசாயிகளை மிரட்டி அடிபணிய வைக்கவேண்டும் என்றால் இந்த போராட்டம் முடிவடையாது. 8 வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த திட்டத்தை 5 மாவட்ட விவசாயிகள் எதிர்க்கின்றனர். யாரும் ஆதரிக்கவில்லை. எனவே 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தினால் அதற்கான எதிர் விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் முனுசாமி குணசேகரன், பரமேஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story