ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு


ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம்; விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 9:12 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு ரூ.6 ஆயிரம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு,

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம் கடந்த 24-2-2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நடுத்தர மற்றும் விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் ஆகிய விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேரலாம். எனவே விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பங்கள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாரிடு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்த திட்டத்தில் சேரலாம்.

இறந்து போன தாய் அல்லது தந்தையின் பெயரில் நிலம் இருந்தால், அதற்கு உரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதி தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 30-ந் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட்டா மாறுதல்களுக்கு வருகிற 18-ந் தேதிவரை தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) முகாம்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Next Story