பண்ருட்டி, நாட்டு மருந்துக்கடையில் தீ விபத்து; ரூ.6 லட்சம் சேதம்


பண்ருட்டி, நாட்டு மருந்துக்கடையில் தீ விபத்து; ரூ.6 லட்சம் சேதம்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 11:32 PM GMT)

பண்ருட்டி நாட்டு மருந்துக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் சேதமடைந்துள்ளது.

பண்ருட்டி,

பண்ருட்டி காந்திரோடு வீதியில் நாட்டு மருந்துக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர்களான அரவிந்தன், ஸ்ரீதர் ஆகியோர் வழக்கம்போல் ஊழியர்களுடன் நேற்று காலை 9 மணிக்கு கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

கடையின் மேல் மாடியில் குடோன் உள்ளது. அந்த குடோனில் நாட்டு மருந்துகள் மற்றும் இலவம் பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காலை 10 மணியளவில் குடோனில் இருந்து திடீரென்று புகை வெளியே வந்தது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு கீழே ஓடிவந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் குடோனில் பிடித்த தீ வேகமாக பரவியது. அங்கிருந்த இலவம் பஞ்சு மூட்டைகளில் தீபிடித்தது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குடோனில் இருந்த நாட்டு மருந்துகள் அனைத்தும் எரிந்து புகை மண்டலமாக மாறியதால் தீயணைப்பு வீரர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள கட்டிடங்களின் மேல் ஏறி நின்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ அருகில் உள்ள கடைகளில் பரவாமல் தடுத்தனர்.

இருப்பினும் இந்த தீவிபத்தில் குடோனில் இருந்த நாட்டு மருந்துகள் மற்றும் இலவம்பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதன் மொத்த சேதமதிப்பு ரூ.6 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

Next Story