நாகர்கோவிலில் கார் விற்பனை நிறுவன ஊழியர் வீட்டில் நகை– பணம் திருட்டு


நாகர்கோவிலில் கார் விற்பனை நிறுவன ஊழியர் வீட்டில் நகை– பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Jun 2019 11:15 PM GMT (Updated: 15 Jun 2019 3:49 PM GMT)

நாகர்கோவிலில் கார் விற்பனை நிறுவன ஊழியர் வீட்டில் நகை– பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி சக்திகார்டன் 2–வது வடக்கு தெருவை சேர்ந்தவர் சிதம்பரதாணு (வயது 39). இவர் நாகர்கோவிலை அடுத்த தோட்டியோடு பகுதியில் உள்ள கார் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசித்து வந்த வீடு வாடகை வீடு ஆகும். வீட்டின் மாடிப்பகுதியில் இவர் குடியிருந்து வந்தார். வீட்டின் கீழ்பகுதியில் வீட்டின் உரிமையாளர் வசித்து வருகிறார். அவர் நெய்வேலியில் என்ஜினீயராக பணிபுரிந்து வருவதால் ஊருக்கு எப்போதாவதுதான் வருவார். அவரது தாயார் வேணி மட்டும் வசித்து வந்தார். அவரும் கடந்த சில தினங்களாக அருகில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.  

இந்தநிலையில் கடந்த 12–ந் தேதி சிதம்பரதாணு தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் அவர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலையில் அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் நெக்லஸ், 2 பவுன் 5 ஜோடி கம்மல் மற்றும் 3 மோதிரம், வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி குத்துவிளக்கு, 2 வெள்ளி செம்பு, ஒரு வெள்ளி கப்பு, சந்தன கும்பா மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

இதேபோல் கீழ்பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டு கதவும் திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் திருட்டுப்போகவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து வடசேரி போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகையை பதிவு செய்தனர்.இந்த வீட்டின் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் எந்த வீட்டிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் வீடுபுகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.திருட்டுப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story