மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்


மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 15 Jun 2019 10:45 PM GMT (Updated: 15 Jun 2019 7:00 PM GMT)

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையொட்டி நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

மீன்பிடிக்க சென்றனர்

இதையொட்டி நேற்று முன்தினம் முதலே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கினர். நீண்ட நாள் கழித்து கடுவையாற்றில் வரிசையாக சென்ற விசைப்படகுகளை காண்பதற்காக அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் பொதுமக்கள் திரண்டனர். ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு கரை திரும்ப குறைந்தது 5 நாட்கள் ஆகும்.

இதனால் மீன்களை பதப்படுத்துவதற்கு ஏதுவாக ஐஸ் கட்டிகள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீனவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைத்திருந்தனர்.

தடைக்காலம் முடிந்து முதன் முதலாக மீன்பிடிக்க செல்வதால் படகுகளுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி மீனவர்கள் வழிபட்டனர்.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் பெரிய வகை படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன் பிரியர்கள் மீன்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இருப்பினும் சிறியவகை படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடந்ததால் ஓரளவு மீன் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

Next Story