சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை


சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2019 12:00 AM GMT (Updated: 15 Jun 2019 8:21 PM GMT)

சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

செங்குன்றம்,

சென்னை வியாசர்பாடி தேசிய ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவருடைய மகன் வல்லரசு (வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாமிக்கண்ணு, வியாசர்பாடியில் இருந்து குடும்பத்தை காலி செய்துவிட்டு மாதவரம் சீதாபதி 19-வது தெருவில் வசித்து வருகிறார். அவருடன் வல்லரசு வசித்து வந்தார்.

பிரபல ரவுடியான வல்லரசு, வடசென்னையை கலக்கி வரும் எண்ணூர் தனசேகரின் முக்கிய கூட்டாளி ஆவார். இவர் மீது சென்னை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் 2017-ம் ஆண்டு சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கு, வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள், ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு, கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வல்லரசுவின் கூட்டாளி பெரம்பூரை சேர்ந்த கதிர் என்கிற கதிரவன் (33). இவர் வல்லரசுடன் சேர்ந்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதேபோல் வல்லரசுவின் மற்றொரு கூட்டாளி பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் (23). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வியாசர்பாடி பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வியாசர்பாடி போலீஸ்காரர்கள் பவுன்ராஜ் (35), ரமேஷ் (32) ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் ரவுடி வல்லரசு, போலீஸ்காரர் ரமேசிடம் வியாசர்பாடி கணேசபுரம் கார்டன் பகுதியில் ஒரு குற்றவாளியை பிடித்து வைத்துள்ளோம் என்று தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய ரமேஷ், சக போலீஸ்காரர் பவுன்ராஜை அழைத்துக்கொண்டு கணேசபுரம் கார்டன் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கதிர் 2 போலீஸ்காரர்களையும் வெட்டுடா என்று வல்லரசிடம் கூறினார். உடனே வல்லரசு கத்தியால் பவுன்ராஜின் தலையில் ஓங்கி வெட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது ரமேஷ் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து கத்தியால் திருப்பி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு 2 போலீஸ்காரர்களும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். அங்கிருந்து வல்லரசு, கார்த்திக், கதிர் ஆகியோர் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரவுடிகளை பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண்தேசாய் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், ரவி, ஜவகர்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன், ஆதர்ஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

ரவுடி வல்லரசு மாதவரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாதவரம் ‘டிரக் டெர்மினல்’ என்ற இடம் அருகே வல்லரசு பதுங்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு மைதானத்தில் வல்லரசு இருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன் ஆகியோர் அவரை பிடிக்கச்சென்றனர். குடிபோதையில் இருந்த வல்லரசு, கத்தியை திருப்பி 2 சப்-இன்ஸ்பெக்டர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ரவி, வல்லரசை சரண் அடையும்படி கூறினார். அதற்கு வல்லரசு, ’உங்களை கொல்லாமல் விட மாட்டேன்’ என கூச்சலிட்டார். உடனே இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வல்லரசின் காலில் சுட்டார்.

உடனே வல்லரசு போலீசாரை நோக்கி ஓடி வந்தார். அதன்பின்னர் ஜார்ஜ் மில்லர் 2 முறை வல்லரசின் மார்பு பகுதியில் சுட்டதில் வல்லரசு கீழே சுருண்டு விழுந்தார். உடனே அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே ரவுடி வல்லரசின் கூட்டாளிகள் சென்னை செம்பியம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று, கதிர், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story