தஞ்சையில், கோவில் கட்ட அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம் 82 பேர் கைது


தஞ்சையில், கோவில் கட்ட அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம் 82 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 11:15 PM GMT (Updated: 19 Jun 2019 6:25 PM GMT)

தஞ்சையில், விநாயகர் கோவில் கட்ட அனுமதிக்கக் கோரி 2 இடங்களில் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 82 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நிர்மலா நகரில் விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நிர்மலா நகரில் பொதுவாக உள்ள மூன்று இடங்களை இரு சமூகத்தினரும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிர்மலா நகரில் விநாயகர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும். இதற்கு இடையூறாக இருக்கும் மற்றொரு சமூகத்தினரை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

ஆனால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணியினர் அறிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த ரெயிலடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இந்து முன்னணியினர் ரெயிலடிக்கு வராமல் தஞ்சை அண்ணா சிலை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாநகர தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிர்மலா நகரில் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மாநில தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியத்தை விடுதலை செய்ய வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை கிறிஸ்தவ ஆலயங்களில் பயன்படுத்தக்கூடாது என பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இந்த மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கினர். அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் நடந்ததுடன் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் போலீசார் லேசாக தடியடி நடத்தினர். உடனே இந்து முன்னணியினர் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்திற்கு பின்னர் தஞ்சை நிர்மலா நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈசானசிவம் தலைமை தாங்கினார்.

மறியலின்போது அவர்கள், விநாயகர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் வந்து அனைவரையும் எழுந்து செல்லும்படி கூறினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் எழுந்து சாலையோரத்திற்கு சென்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த அரசு பஸ் ஒன்று இவர்களை கடந்து செல்ல முயன்றபோது 2 நிர்வாகிகள் ஓடிச்சென்று அந்த பஸ்சின் முன்பு படுத்துக்கொண்டனர்.

இதை பார்த்த போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கியபோது போலீசாருடன், மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்து மினிபஸ்சில் ஏற்றி சென்றனர்.

இரண்டு இடங்களிலும் மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 82 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story