திருவோணத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த மான் வனத்துறை அதிகாரிகள் விசாரணை


திருவோணத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த மான் வனத்துறை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 19 Jun 2019 10:45 PM GMT (Updated: 19 Jun 2019 7:02 PM GMT)

திருவோணத்தில் மான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. அந்த மான் இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டின் பின்புறம் கழிவறை அருகே நேற்று அதிகாலை மான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் திருவோணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பட்டுக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விசாரணை

இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை வனகாப்பாளர் முருகானந்தம், வனகாவலர் சீனிவாசன் ஆகியோர் அங்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருவோணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மான் எப்படி இறந்தது? என்பது பற்றிய விவரம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story