இனியும் அதிகாரிகளை நம்பினால் பயன் கிடைக்காது: ஏரியில் தூர்வாரும் பணியை தொடங்கிய பரவாய் கிராம மக்கள்


இனியும் அதிகாரிகளை நம்பினால் பயன் கிடைக்காது: ஏரியில் தூர்வாரும் பணியை தொடங்கிய பரவாய் கிராம மக்கள்
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 7:28 PM GMT)

இனியும் அதிகாரிகளை நம்பினால் பயன் கிடைக்காது என்று முடிவெடுத்த பரவாய் கிராம மக்கள் தாங்களே ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கினர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தின் தெற்கே மார்க்காய் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் தூர்ந்து போனது. மேலும், ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதராக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக ஏரியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இந்த ஏரியின் மூலம் பயன்பெற்ற விளை நிலங்களும் வறண்டு போயின. கிராம மக்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது. இந்த ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இனியும் அதிகாரிகளை நம்பினால் பயன் கிடைக்காது என்று முடி வெடுத்த கிராம மக்கள், அந்த ஏரியை தூர்வார வீடு, வீடாக பணத்தை வசூல் செய்தனர். பின்னர், பரவாய் கிராமத்திலுள்ள ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் போன்ற கருவிகளுடன் ஏரியை தூர் வரும் பணியை தொடங்கினர். மேலும், பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், ஊர்மக்களை ஒன்றுகூடி பணம் வசூல் செய்து ஏரியை தூர்வாருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story