குவிண்டாலுக்கு ரூ.3,500 அறிவிக்க வலியுறுத்தி தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குவிண்டாலுக்கு ரூ.3,500 அறிவிக்க வலியுறுத்தி தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2019 11:15 PM GMT (Updated: 20 Jun 2019 6:49 PM GMT)

குவிண்டாலுக்கு ரூ.3,500 அறிவிக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெடார் தருமராஜன் தலைமை தாங்கினார். ஆதிகலியபெருமாள், வேப்பத்தூர் வரதராஜன், திருபுவனம் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலசெம்மங்குடி சின்னதுரை, மருத்துவக்குடி முருகேசன், மனப்பையூர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை அறிவிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழைக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை பயிர்க் கடன் உடனே வழங்க வேண்டும்.

தரையில் நெல்லை கொட்டினர்

2016-2019-ம் ஆண்டு வரை பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பட்டத்தின்போது தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story