வெவ்வேறு சம்பவங்கள்: இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்கள்: இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 5:38 PM GMT)

மணவாளக்குறிச்சி, குலசேகரம் ஆகிய பகுதிகளில் இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் தாமஸ்தெருவை சேர்ந்தவர் பெல்கீஸ். இவருடைய மகள் அனியா சாரோன் பெல்ஸ் (வயது 18). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனியா சாரோன் பெல்ஸ்சின் அக்காவும், கணவரும் தற்கொலை செய்து கொண்டனர். அதன்பின்பு இவர் மிகுந்த சோகத்தில் காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனியா சாரோன் பெல்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த தாயார் திரும்ப வந்த போது, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடியப்பட்டணம், தாமஸ்தெருவை சேர்ந்தவர் கோஸ்த் அந்தோணி (59), மீனவர். இவர் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த கோஸ்த் அந்தோணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

குலசேகரம் வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (39). இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மணிகண்டன் மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால், மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். அதன்பின்பு மணிகண்டன் மிகுந்த சோகத்தில் இருந்தார்.

இந்தநிலையில், வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story