தொழிலதிபரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது


தொழிலதிபரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2019 11:09 PM GMT (Updated: 21 Jun 2019 11:09 PM GMT)

தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தவர் குருமூர்த்தி, தொழிலதிபர். இவர் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது மனைவியுடன் சேர்ந்து சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2011 முதல் 2013 வரை உள்ள காலங்களில் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து 34½ லட்சம் ரூபாய் காசோலை மூலமாகவும், பணம் எடுக்கும் செல்லான் மூலமாகவும் போலியாக கையெழுத்திட்டு எடுக்கப்பட்டு இருந்தது. இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது அவர்களுக்கு தெரியவந்தது.

எனவே அவர்கள் இது தொடர்பாக பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், சம்பவம் நடைபெற்ற காலத்தில் வங்கியின் மேலாளராக பணியாற்றி வந்த பாலசுப்ரமணியன் (52) தங்களது பணத்தை மோடி செய்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன்பேரில் பெரியகடை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குருமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. மேலும் பாலசுப்ரமணியன் தற்போது சென்னையில் உள்ள வங்கியில் வேலை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்னை சென்று பாலசுப்ரமணியனை கைது செய்து புதுவை கொண்டு வந்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.


Next Story