தர்மபுரியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:21 PM GMT (Updated: 22 Jun 2019 11:21 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தர்மபுரியில் தி.மு.க.வினர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்தும் தர்மபுரி தொலைபேசி நிலையம்அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி.தாமரைச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், வக்கீல் அணி மாவட்ட துணை செயலாளர் ஆ.மணி, பொறியாளர் அணி மாவட்ட செயலாளர் கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஏரிகள், கால்வாய்களை தூர்வாரவும், நீர்வழிதடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சேட்டு, குமரவேல், கோபால், தேசிங்குராஜன், சிவப்பிரகாசம், சித்தார்த்தன், சண்முகநதி, செங்கண்ணன், செல்வராஜ், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் முருகன், சந்திரமோகன், தங்கமணி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமைசெயற்குழு உறுப்பினர் முரளி நன்றி கூறினார்.


Next Story