கருணை அடிப்படையில் வேலை அளிக்கும் திட்டத்தால் ‘‘படித்து முடித்த இளைஞர்களின் கனவு பறிபோய் விடக்கூடாது’’ ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


கருணை அடிப்படையில் வேலை அளிக்கும் திட்டத்தால் ‘‘படித்து முடித்த இளைஞர்களின் கனவு பறிபோய் விடக்கூடாது’’ ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 9:25 PM GMT)

‘‘கருணை அடிப்படையில் வேலை அளிக்கும் திட்டத்தால் படித்து முடித்த இளைஞர்களின் கனவு பறிபோய் விடக்கூடாது’’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 2001–ம் ஆண்டில் பணியில் இருந்தபோது இறந்தார். இதனால் கருணை வேலை கேட்டு அவரது மகள் பரணி சக்தி 2006–ம் ஆண்டில் விண்ணப்பித்தார். இவரது மனுவை நிராகரித்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்து கருணை வேலை வழங்க உத்தரவிடக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

கருணை வேலை போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்களை அமல்படுத்தும் சமயத்தில் அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரிப்பதில் அதிகாரிகள் எவ்வித சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும். கருணை வேலை என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது.

லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கனவு, கருணை வேலை வழங்கும் திட்டத்தால் பறிபோய்விடக்கூடாது. அரசு வேலையில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் போது ஏழை குடும்பங்களை சேர்ந்த தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வாகும் சூழ்நிலை உருவாகும்.

அரசு ஊழியர் இறந்ததால் உண்மையிலேயே பாதிப்பை சந்திப்பவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக மட்டுமே கருணை வேலை திட்டத்தை பார்க்க வேண்டும்.

எனவே தமிழகத்தில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை தலைமை செயலாளர் முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஏற்ற வகையில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கையை பிறப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகளை மீறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story