ஏரியூர் அருகே வனப்பகுதியில் கிடந்த 7 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசார் கைப்பற்றி விசாரணை


ஏரியூர் அருகே வனப்பகுதியில் கிடந்த 7 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசார் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 9:28 PM GMT)

ஏரியூர் அருகே வனப்பகுதியில் 7 நாட்டுத்துப்பாக்கிகள் கிடந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டுத்துப்பாக்கிகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் போலீசார் கைப்பற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

7 நாட்டுத்துப்பாக்கிகள்

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏர்கோல்பட்டி, மாதையன்குட்டை வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் கிடப்பதாக ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 7 நாட்டுத்துப்பாக்கிகள் கிடந்ததை பார்த்த போலீசார் அவற்றை கைப்பற்றினர். நாட்டுத்துப்பாக்கிகளை வீசிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த வாரம் சந்தைப்பேட்டை வனப்பகுதியில் 5 நாட்டுத்துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றிருந்தனர். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஏரியூர் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் 12 நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் வீசிச்சென்ற சம்பவம் ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story