செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவன குழாய்கள் பதிப்பதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவன குழாய்கள் பதிப்பதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 11:15 PM GMT (Updated: 26 Jun 2019 6:47 PM GMT)

செம்பனார்கோவில் அருகே ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

அதன்படி செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம், முடிகண்டநல்லூர் உள்பட பல கிராமங்களில் சாகுபடி செய்த விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும், சாகுபடி செய்யாத விளைநிலங்களிலும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கண்ட கிராமங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

இதேபோல் செம்பனார்கோவில் அருகே முக்கறும்பூர் கிராமத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளைநிலத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளைநிலத்தில் இறங்கி கெயில் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விளை நிலங்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story