நடப்பாண்டு இதுவரையில் 1,267 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு சர்வதேச நீதிக்குழுமத்தின் இணை இயக்குனர் தகவல்


நடப்பாண்டு இதுவரையில் 1,267 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு சர்வதேச நீதிக்குழுமத்தின் இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2019 10:15 PM GMT (Updated: 26 Jun 2019 7:18 PM GMT)

நடப்பாண்டு இதுவரையில, 1,267 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச நீதிக்குழுமத்தின் இணை இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்,

இந்தியாவில் 2015-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1.27 கோடி பேர் கொத்தடிமை முறையில் சிக்கித்தவிப்பது தெரிய வந்தது. மேலும், மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் 2016-ம் ஆண்டு அறிக்கையில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 391 கொத்தடிமை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 65,573 பேர் கொத்தடிமை தொழிலாளர் முறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

1,267 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 1,267 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதியில் ஆடு மேய்த்தல் தொழிலில் அதிக அளவில் கொத்தடிமை தொழிலாளர்களாக உள்ளனர். மேலும், காவிரி, வெண்ணாறு, வெட்டாற்றங்கரையில் உள்ள செங்கல் சூளைகளில் அதிக அளவில் கொத்தடிமை தொழிலாளர்கள் இருக்கின்றனர். அண்மைக்காலமாக வாத்து மேய்த்தல் தொழில், தேங்காய் நார் தொழில், கல் குவாரி, அரிசி ஆலை, பண்ணைகள், தோட்டங்கள் உள்ளிட்டவற்றிலும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது, கொத்தடிமை முறை நவீன வடிவத்தில் ஊடுருவிக்கொண்டு இருக்கிறது. தொழிலாளர்களுக்கு முதலாளிகள் முன் பணம் கொடுத்து கொத்தடிமையாக்கும் முறையே அதிகமாக இருக்கிறது. இதனால், புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் தங்களது உரிமைகளை இழந்து, குறைந்த ஊதியத்தில் பணியாற்ற நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர்.

தண்டனை விகிதம் குறைவு

தொழிலாளர்கள் கொத்தடிமை முறையில் பணியாற்றுவது தெரிய வந்தால், தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் செய்யலாம். கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு கோட்டாட்சியர் விடுதலைச் சான்றிதழையும், முதல் கட்டமாக ரூ. 20 ஆயிரம் மறுவாழ்வு நிதியையும் வழங்குவார். கொத்தடிமை ஒழிப்பு சட்ட வழக்குகளில் உரிமையாளருக்கு தண்டனை கிடைத்து வருகிறது. சிலருக்கு ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை தண்டனை என விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், தண்டனை விகிதம் 10 முதல் 15 சதவீதம் என குறைவாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிலரங்கில் செட் இண்டியா தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்த ஜெய், சர்வதேச நீதிக் குழும ஊடக ஒருங்கிணைப்பாளர் புகழ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story