தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மேலும் 6 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மேலும் 6 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
x
தினத்தந்தி 27 Jun 2019 10:45 PM GMT (Updated: 27 Jun 2019 7:04 PM GMT)

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மேலும் 6 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருச்சி-காரைக்கால் இடையே ரெயில்வே மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் தஞ்சை-திருச்சி இடையே பணிகள் முடிவடைந்து விட்டன.

துணை மின் நிலைய பணிகள் முடிவடையாததால் மின்சார ரெயில் இன்னும் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் தஞ்சை-காரைக்கால் இடையேயான மின்மயமாக்கும் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

திருச்சி கோட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை ரெயில் நிலையங்கள் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் ரெயில் நிலையங்கள் ஆகும். இந்த ரெயில் நிலையங்கள் வழியாக தற்போது தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் 23-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை, கோவை, திருச்செந்தூர், எர்ணாகுளம், கோவை, திருப்பதி, ராமேஸ்வரம், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 15-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த 3 மாவட்டங்களில் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய 5 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி பயன்பாட்டில் உள்ளது. ரெயில் ஏறுவதற்காக வரும் பயணிகள் பிளாட்பாரங்களில் காத்திருக்கிறார்கள். அவ்வாறு காத்திருக்கும் பயணிகளுக்கு இந்த வை-பை வசதி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த வை-பை வசதி குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் பின்னர் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த நிலையில் மத்திய ரெயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் 1,603 ரெயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் 4,800 ரெயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி தஞ்சை, நாகை, திரூவாரூர் மாவட்டங்களில் நாகப்பட்டினம், நாகூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ரெயில்வே அமைச்சகம் சமீபத்தில் செயல்படுத்திய அதன் செயல் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல ரெயில் நிலையங்களில் வை-பை வசதியை செயல்படுத்த உள்ளது. இந்த வை-பை வசதி இன்னும் 100 நாட்களில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.

Next Story