கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வழித்தடத்தில் பஸ் வசதி ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்


கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வழித்தடத்தில் பஸ் வசதி ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Jun 2019 10:30 PM GMT (Updated: 29 Jun 2019 7:29 PM GMT)

தேனி அருகே வீரபாண்டியில், கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வழித்தடத்தில் பஸ் வசதி ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தேனி,

தேனி அருகே வீரபாண்டியில் தப்புக்குண்டு சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லை. குறிப்பாக கல்லூரி முடிந்து மாலையில் திரும்பி வரும் போது பஸ் வசதி இல்லாமல் நீண்ட தூரம் நடந்து வந்து, உப்பார்பட்டி விலக்கில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலைமை இருந்தது. இதையடுத்து இந்த கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, பெரியகுளத்தில் இருந்து புறப்பட்டு, தேனி, வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தப்புக்குண்டு, வெங்கடாசலபுரம், ஜங்கால்பட்டி, குப்பிநாயக்கன்பட்டி, அண்ணாநகர், கடமலைக்குண்டு வழியாக மயிலாடும்பாறைக்கு நேற்று முதல் பஸ் இயக்கப்பட்டது. இந்த புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கும் சேவையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலையில் தொடங்கி வைத்தார். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு டவுன் பஸ்சை ஓ.பன்னீர்செல்வம் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த பஸ் தினமும் காலை 5.50 மணிக்கு பெரியகுளத்தில் இருந்து புறப்பட்டு தேனி வரும். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.40 மணிக்கு வீரபாண்டி வழியாக மயிலாடும்பாறைக்கு செல்லும். பின்னர் பிற்பகல் 2.50 மணிக்கு தேனியில் இருந்து புறப்பட்டு மயிலாடும்பாறை செல்லும்.

Next Story