மரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர் சாவு


மரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர் சாவு
x
தினத்தந்தி 2 July 2019 10:15 PM GMT (Updated: 2 July 2019 6:55 PM GMT)

நீடாமங்கலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 52). இவர் நீடாமங்கலம் மின்வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார். இவர் தென்காரவயல் கிராமத்தில் பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் ராயபுரம் பாலம் அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த மரத்தில், மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த முனியாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பான புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டிக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்.

Next Story