கொளக்காநத்தம் கிராமத்தில் உருவாக்கப்பட்ட 2 புதிய ஏரிகள்


கொளக்காநத்தம் கிராமத்தில் உருவாக்கப்பட்ட 2 புதிய ஏரிகள்
x
தினத்தந்தி 3 July 2019 11:00 PM GMT (Updated: 3 July 2019 6:22 PM GMT)

கொளக்காநத்தம் கிராமத்தில் சிறிய கசிவுநீர் குட்டைகள் ஒழுங்கமைக்கப்பட்ட தில் அங்கு 2 புதிய ஏரிகள் உருவாக்கப்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வாயிலாக 2 சிறிய கசிவு நீர் குட்டைகள் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த 2 சிறிய கசிவுநீர் குட்டைகளை சுற்றிலும் பெரிய பரப்பளவில் கரைகள் அமைக்கப்பட்டு, ஏரியை போன்று வடிவமைக்கப்பட்டது. மழைபெய்தால் கசிவுநீர் குட்டைகள் மற்றும் அதன் அருகே உள்ள கரைகளில் நீர் நிறைந்து ஏரியை போல் காட்சித்தர வாய்ப்புள்ளது. அரசு அளித்த திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு, வல்லுனர் களுடன் கலந்து ஆலோசித்து, மழைக்காலத்திற்கு முன்பாக இந்த வேலையை தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் செய்து முடித்து விட்டனர்.

ஏற்கனவே ஊரில் வடக்கு ஏரி, தெற்கு ஏரி என 2 பெரிய ஏரிகள் உள்ளன. தற்போது புதிய 2 ஏரிகள் ஊருக்கு உருவாக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் ஏரியை போன்று வடிவமைக்கப்பட்ட 2 சிறிய கசிவுநீர் குட்டைகளில் படையலிட்டு, இந்த புதிய ஏரிகள் நிறைய மழை பொழிய வேண்டும் என இயற்கையை வழிபட்டனர். மழை பெய்த பின்னர், கரைகளில் பனை விதைகள் விதைப்பது, ஆலமரம் நடுவது என திட்டமிட்டு உள்ளனர். மக்கள் தாங்கள் உருவாக்கிய இந்த திட்டத்தை தங்களுக்கு தாங்களே அர்ப்பணித்துக்கொண்ட நிகழ்ச்சியில் வட்டார துணை வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, முன்னாள் துணைத்தலைவர் ராகவன், ஊராட்சி செயலர் ராம்குமார், சமூக ஆர்வலர் அருண் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story