நாகை அருகே தீயில் எரிந்து 2 கூரை வீடுகள் சேதம்


நாகை அருகே தீயில் எரிந்து 2 கூரை வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 7 July 2019 10:30 PM GMT (Updated: 7 July 2019 7:02 PM GMT)

நாகையை அடுத்த பாப்பாகோவில் அருகே ஏறும் சாலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த பாப்பாகோவில் அருகே ஏறும் சாலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர் கலியபொருமாள். இவர் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள மதியழகன் என்பவரது வீட்டிற்கும் பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் 2 வீடுகளும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீடுகளில் இருந்த துணிகள், பீரோ, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.இதன் சேதமதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story