குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 8:38 PM GMT)

குளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ்நிலையம் சுற்றியுள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா?, தரமான உணவுப்பொருட்கள் விற்கப்படுகிறதா?, காலவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவைகள் குறித்து கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் பயன்படுத்தப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்ப பிளாஸ்டிக் பொருட்கள், தரமற்ற மற்றும் மூடப்பட்டு விற்கப்படாத இனிப்பு வகைகள் உள்ளிட்ட உண்ணும் பொருட்கள், காலவதியான குளிர்பானங்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், உண்ணும் பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் வோவன் பேக் எனப்படும் ஒருவகையான பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த திடீர் ஆய்வில் 20 கடைக்காரர்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சசிதீபா, குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கார்த்திகேயன், கரூர் நகர் நலஅலுவலர் டாக்டர் ஸ்ரீபிரியா, குளித்தலை வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன், குளித்தலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் உள்பட பலர் உடனிருந்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது பல கடைகளில் இருந்து நான்வோவன் பேக் என்ற ஒருவகையான பையை பயன்படுத்தக்கூடாதெனக்கூறி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது அங்கிருந்த குளித்தலை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்த்குமார் மற்றும் பொதுமக்கள் சிலர் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டபிறகு குளித்தலை பகுதியில் உள்ள பெறும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கேரிபைக்கு பதிலாக இந்த நான்வோவன் பேக் வகையான பையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பையும் தடைசெய்யப்பட்ட பைதான் என்பது குறித்து எந்த அறிவிப்போ, முறையான விழிப்புணர்வோ தற்போதுவரை ஏற்படுத்தவில்லை.

இந்தநிலையில் இந்த வகை பைகளையும் பறிமுதல் செய்தால் கடைக்காரர்கள் என்ன செய்வதன்று மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாசிடம் கேள்வி எழுப்பினார்கள். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற பைகளை பயன்படுத்தக்கூடாதென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக சூர்யபிரகாஷ் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

Next Story