லாலாபேட்டை மகா மாரியம்மன் கோவில் ஆனி தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


லாலாபேட்டை மகா மாரியம்மன் கோவில் ஆனி தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 10 July 2019 10:30 PM GMT (Updated: 10 July 2019 8:44 PM GMT)

லாலாபேட்டை மகா மாரியம்மன் கோவிலில் ஆனிதேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 7-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்று மாலை லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து கரகம்பாலித்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் மண்டகபடி நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மலர்மாலைகள், வாழைத்தார், மாங்கனி, நொங்குகுலை, கரும்பு உள்பட பல்வேறு அலங்காரத்தில் இருந்த தேரில் மகா மாரியம்மனை எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

பின்னர் தேர் நிலையை வந்தடைந்தவுடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Next Story