மேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தை பெற்ற பெண், திடீர் சாவு - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு


மேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தை பெற்ற பெண், திடீர் சாவு - உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2019 10:45 PM GMT (Updated: 10 July 2019 9:00 PM GMT)

சின்னசேலம் அருகே மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற பெண், பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னசேலம்,

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகள் கவுசல்யா(வயது 20). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் நாகராஜ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவுசல்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் பிரசவத்துக்காக அருகில் உள்ள மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கவுசல்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை. இதையடுத்து கவுசல்யா, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுசல்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த நிலையில் டாக்டர் வர தாமதமானதாலும், உரிய சிகிச்சை அளிக்காததாலும் தான் கவுசல்யா இறந்து விட்டதாக கூறி மேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story