பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 5:32 PM GMT)

பா.ஜ.க.வை கண்டித்து பெரம்பலூர்- அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

கர்நாடகம் மற்றும் கோவாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி குதிரை பேரத்தின் மூலம், அந்த மாநிலங்களில் ஆட்சியை பா.ஜ.க. கலைக்க முயலுவதாகவும், இதனால் பா.ஜ.க.வை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமதுமீரான், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை ராஜூவ்காந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி வரவேற்றார். முடிவில் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில்பிரசாத் நன்றி கூறினார்.

இதேபோல் பா.ஜ.க.வை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் நகர தலைவர் சந்திரசேகர், செய்தி தொடர்பாளர் சிவக்குமார், மாரியம்மாள், ஜெயச்சந்திரன், சின்னபொன்னு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story