பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடிக்கு தீர்வு


பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடிக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 5:46 PM GMT)

பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 579 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்,

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி லிங்கேஸ்வரன் தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மலர்விழி, தலைமை நீதித்துறை நடுவர் கிரி, மாவட்ட சட்ட ஆணைக்குழுவின் செயலாளரும் மற்றும் சார்பு நீதிபதியுமான வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் செந்தில்ராஜன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணையன் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலுள்ள நிலுவையில் உள்ள வாரா கடன் வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

579 வழக்குகளுக்கு தீர்வு

இதில் 196 வங்கி வழக்குகளில் ரூ.1 கோடியே 66 லட்சத்து 89 ஆயிரத்து 672-க்கும், 73 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.3 கோடியே 81 லட்சத்து 99 ஆயிரத்து 600-க்கும் தீர்வு காணப்பட்டது. 43 சிவில் வழக்குகளில் ரூ.2 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 536-ம் உள்ளிட்ட என மொத்தம் 579 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 732-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெறப்பட்ட வழக்கின், வழக்குதாரருக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி லிங்கேஸ்வரன் நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல் சங்க செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், முகமது இலியாஸ், அரசு வக்கீல்கள் கணேசன், பாலமுருகன் மற்றும் வக்கீல்கள், வருவாய்த்துறையினர், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story