5 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த வழக்கில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஜோதிடர் கைது


5 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த வழக்கில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஜோதிடர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 6:43 PM GMT)

5 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த வழக்கில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சி ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாவி. இவரது மகன் சங்கர் (வயது 30). கிளி ஜோதிடரான இவர், 5 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்து, தகாத உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் சங்கரை கண்டித்தனர்.

இந்தநிலையில் அந்த பெண் தனது 5 குழந்தைகளையும் அழைத்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகும் மீண்டும் அந்த பெண்ணிற்கு சங்கர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 10-ந்தேதி கீழவெளியூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளி ஜோதிடர் சங்கரை வலைவீசி தேடி வந்தனர்.

ஜோதிடர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கரை தோகைமலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கு தொடர்ந்து சங்கர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தோகைமலை போலீசார் சங்கரை கைது செய்தனர். பின்னர் அவரை குளித்தலை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், அவரது 5 குழந்தைகளும் தாய்-தந்தை ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த குழந்தைகள் தற்போது அவர்களது பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story